"எருது உடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான்;
ஒரு தொடையான் வெல்வது கோழி;உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப ;
செறிவு உடையான் சேனாபதி"

-நான்மணிக்கடிகை

இல்லாள் பரிசு

வருடத்திற்கொருமுறை பண்ணையில் பழுதான பொருட்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள் சிலவற்றையும் மாற்ற வேண்டிய சூழ்நிலையேற்படலாம். நாம் நம்முடைய தேவைக்குப்போக மீதியை தினசரி கடைவிரித்ததில் கிடைத்த உபரி… வாரச்சந்தையில் பொருட்களை கடைவிரித்ததின்மூலம் கிடைத்த உபரி…

மாதச்சந்தையில் மதிப்புக்கூட்டுப்பொருட்களை விற்றதின்மூலம் கிடைத்த உபரி என பண்ணையையும், வீட்டையும் மிகச்சரியாக நிர்வாகம் செய்திருக்கும் ஆய்ச்சியர் கைகளில் நிச்சயம் ஏராளமாக செல்வமிருக்கும்.

ஒருசில சந்தைகள் வாரந்தோறும் இயங்கினாலும் திருவிழா மற்றும் பண்டிகைக்காலங்களில் சிறப்பு சந்தைகளாக மாறும். அப்படிப்பட்ட சந்தைகளில் எது நமக்கு பிடித்தமான சந்தையாக விளங்குகிறதோ அந்த சந்தையை தேர்வு செய்து  பொருட்களை கொள்முதல் செய்து வரலாம். வருடத்திற்கொருமுறை நாம் நுகரப்போகும் பொருட்களுக்கு  நம் வீட்டு பெண்களே நிதியமைச்சர். எனவே வருடத்திற்கொருமுறை அவர்களையும் சந்தைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொண்டு வர தற்சார்பு நிலைத்திருக்கும்.

எகா:

  • அந்தியூர் சந்தை
  • போச்சம்பள்ளி சந்தை
  • பல்லாவரம் சந்தை
  • மதுரை ஞாயிறு சந்தை

வீட்டு உபயோகப்பொருட்கள்

  • சமையலுக்குத்தேவையான மண்பாண்ட ம், மத்து, முறம், மூங்கில் கூடை உள்ளிட்ட பொருட்கள்...
  • தலையனை, மிதியடி, கோரைப்பாய், பனையோலைப்பாய் மற்றும் நமக்கு தேவையான துணி வகைகள் உள்ளிட்ட பொருட்கள்....
  • வீட்டையும், பண்ணையையும் புதுபிக்க பயன்படும் சுண்ணாம்பு, காதி, பனைநார் மற்றும் தென்னந்தூம்பு உள்ளிட்ட பொருட்களை வருடத்திற்கொருமுறை வாங்கிவர தற்சார்பு மேம்படும்.

தமிழகத்திற்கென்று பல வகையான மாட்டினங்கள் இருக்கின்றது.அதில் நம்முடைய நிலத்திற்குத்தேவையான இனம் எதுவோ அதை சந்தைகளில் தேர்வுசெய்து வாங்கலாம்.

தற்போதைய முதலாளித்துவத்தின் கோரக்கரங்கள் பசுவினங்களின் பிறப்புறுப்புவரை நீள்கிறது. அவற்றின் கைகள் நம் பண்ணைவரை நீளாதிருக்க பொலிக்காளையொன்றை சந்தையிலிருந்து தருவித்து வளர்த்து வருதலின் மூலம் தடுக்க முடியும்.

நிலத்தில் ஏறுபூட்டவும், மாட்டுவண்டி இழுக்கவும் பழக்கப்படுத்தப்பட்ட ஜோடிகள் சந்தையில் விற்பனைக்கு வரும். அவற்றில் நமக்கு பிடித்தமானதை பண்ணைக்கு வாங்கிவந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர தற்சார்பு வாழ்க்கை சிறப்புறும்.

அடிசில்:

அக்காரம் என்றால் கற்கண்டு அல்லது கரும்பு வெல்லம் இவற்றைக்கொண்டு செய்வது அக்கார அடிசல்.... நெய் சேர்த்து செய்தால் நெய்யுடை அடிசில்.... பால் சேர்த்து செய்தால் பாலுடை அடிசில்... இப்படி அடிசிலில் பலவகை இருந்தாலும் குழைவாக ஆக்கிய நெல்லரசிச்சோறு என்று பொதுப்பெயரில் அழைக்கப்படுவதுமுண்டு.

கலவை:

சோற்றுடன் வேறுசில பொருட்கள் சேர்த்து சமைக்கப்படும் உணவே கலவையுணவு. எகா. புளியோதரை சாதம், கறிவேப்பிலை சாதம், தக்காளிசாதம்.

கும்மாயம்:

கும்மாயம் என்பது வேகவைத்த பருப்பு. இவற்றை உளுந்து பாசிப்பயறுமாவு, நெய், பனங்கருப்பட்டி சேர்த்து ஒரு வகை இனிப்பு பலகாரமாகவும் செய்யலாம்.

மூரல்:

சரியாக வேகாத சோறு விதைவிதையாய் இருக்கும். நன்றாக வெந்துவிட்டால் குழைந்துபோகும். இரண்டிற்குமிடையில் சரியான பதத்தில் இருந்தால் குழம்பு கூட்டி சாப்பிட இதமாயிருக்கும் சோறு மூரல் எனப்படுகிறது

மோதகம்:

கற்கண்டை இளக்கிப்பாகாக்கி செய்யப்படும் ஒருவகைக்கொழுக்கட்டை.

களி:

கொதிக்கின்ற நீரில் மாவைச்சிறிது சிறிதாகச்சேர்த்துக்கலக்க வேண்டும். அது கெட்டிபடும் நிலை வரும்போது துடுப்புகொண்டு நன்றாக கிண்ட களி தயாராகும். எகா: கேப்பைக்களி, உளுந்தங்களி, வெந்தையக்களி.

நுவணை:

கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம், குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானி மாவுடன் இனிப்பு கலந்து செய்யப்படும் ஒருவகை இனிப்புருண்டை.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் -இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உறைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூராய் விடும்."
                                                    -ஔவையார்.
Close