"சிறுதிணை மறுகால்
கொழுங்கொடி அவரை பூக்கும்"
விதைத்தேர்வு
டேய் ரொம்பநாளா ஒரு சந்தேகம் இருந்துட்டேயிருக்கு. அது என்னன்னு சொல்லிட்டேன்னா நல்லாயிருக்கும்.
ம். கேளு தெரிஞ்சா சொல்றேன்.
இந்த குழந்தையில்லன்னு சொல்லி கருத்தரிப்பு மையம் போய் குழந்தை பெத்துக்குறாங்கல்ல அதெப்படின்னு என் மண்ட கொடஞ்சிக்கிட்டேயிருக்குடா?
ம்,புரியுது. அதைப்பத்தி எனக்குத்தெரில. ஏன்னா அது அறிவியல். நம்ம அந்த அளவுக்கெல்லாம் படிக்கல. விதையின் தரத்தை தேர்வு செய்யும் அறிவை நாம் இழந்துவிட்டோம்ன்னு மட்டும் தெரியுது.
ஒருமுறை கர்நாடகக்காடுகளுக்குள் பயணத்திலிருந்தேன். நீரோடைகளில் தண்ணீர் வற்றிப்போன கடுங்கோடையிலும் கூட காட்டில் ஒருசில இடங்களில் சுனை ஊற்று இருந்தது. அதில் ஒரு ஊற்றைத்தேர்வு செய்து ஆநீரைகளின் தாகம் தீர்க்கவும், கீதாரிகள் சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்தி வந்தார்கள்.
நான் சென்றிருந்தது இலையுதிர்க்காலம் ஆதலால் மரம், செடிகொடிகளை அடையாளம் காண்பதில் சிரமமிருந்தது.
அந்த சுனைக்கருகில் ஒரு பெரிய முருங்கை இலைகளனைத்தையும் உதிர்த்துவிட்டு பட்ட மரம்போல் காட்சியளித்தது. அதில் கூர்ந்து கவனித்தபோது அதன் உச்சியில் ஒரேயொரு முருங்கைக்காய் மட்டும் காய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது.
கற்கள் கொண்டு எரிந்து வீழ்த்திய போது அதனுள் நான்கே நான்கு விதைகள் மட்டுமேயிருந்தது.
அந்த விதையை தோட்டத்தில் விதைத்து குறுமரமாக மாற்றிய பின்பு ஒருநாள் அதன் கீரைகளை சமைத்தோம்.
அது சற்றே கூடுதலான கசப்புத்தன்மையுடன்கூடிய ஒரு வித்தியாசமான சுவையைக்கொண்டிருந்தது. அதன் இலை சற்று முரட்டுத்தன்மையுடன் உள்ளதால் அப்படியிருக்குமென்று நாங்களாகவே உள்ளுக்குள் சமாதானம் செய்து கொண்டு சாப்பிட்டு முடித்தோம். சிறிது நேரத்திற்குள் சாப்பிட்ட அனைவருக்கும் தொடர் வயிற்றோட்டம்.
அறிவுக்கு தென்பட்ட, சிந்தனைக்கு பழக்கப்பட்ட தெரிந்த ஒரு தாவரத்தின் இலைகளைச்சாப்பிட்டதற்கே இந்தா பாடுன்னா? ஒவ்வொரு தாவரத்தையும், விலங்கினங்களையும் பரிசோதனைக்கு உற்படுத்தி அதில் தேர்வானதை மனிதனுக்கு இவை மிக நெருக்கமாக பயணிக்குமென்று கணித்து நமக்கு கைமாற்றிக்கொடுத்த நம் முன்னோர்கள் ஒரு நிமிடம் என்முன்னே வந்து போனார்கள்.
பிறகு சில வருடங்கள் செல்லச்செல்ல. அந்த முருங்கை மரத்தின் இலைகளின் தன்மை மாறத்தொடங்கியது. இப்போது கீரை சமைத்தால் வயிற்றுக்கு எந்த தொந்தரவுமில்லை.
காட்டிலிருந்து சமவெளி பகுதிக்கு வந்ததால் அதன் தன்மையை மாற்றிக்கொண்டதா ?அல்லது அதனை செரிக்கிற தன்மை நம் குடலுக்கு வந்து விட்டதா? அல்லது இரண்டுமேதானா? தெரியவில்லை.
மறு சுழற்சிக்கு உதவாத கோழி இறைச்சி மற்றும் முட்டைகள்…
சினை ஊசியால் கரு உருவான மாடுகளின் மூலம் கிடைக்கப்பெறும் பால் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்….
மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்கள்…
நீண்ட நாட்க கெட்டுப்போகாமிலிருக்கும் பதத்படுத்தப்பட்ட பொதிவு உணவுகள்… இவையனைத்தையும் உட்கொண்டு உயிர்வாழும் மனிதனால் அடுத்த தலைமுறையை உருவாக்க வழுவில்லாமல் போவது சாதாரணமான காரியமே. இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
இயற்கைவழி வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். கடந்த நூறு வருடங்களாக இந்த மனித சமூகம் மின்சாரம் கப்பல் கணினியென நவீன கண்டுபிடிப்புகளின்மேல் தீவிரமாக கவனம் செலுத்துகிறதேயொழிய தனக்குத்தேவையான ஒரு புதிய தாவரத்தை, ஒரு புதிய விலங்கை கண்டுபிடித்து கைமாற்றிக்கொடுக்கிற வேலையை நிறுத்திக்கொண்டது என்கிறார்.
நாம் என்ன சொல்றோம்ன்னா அட புதுசா கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்ல ஏற்கெனவே கண்டுபிடித்து கைமாற்றிக்கொடுத்த விதைகளைக்கெட்டியாக பிடித்துக்கொண்டாலே போதுமானது நாம் பிழைத்துக்கொள்வோம் என்கிறோம்.
சந்தையில் நமக்குத்தேவையான பொருட்களை தரம்பிரித்து தேர்வுசெய்து வாங்குவதைப்போல தற்சார்பாக தோட்டம் அமைத்து வாழ முற்படும் ஒருவர் விதைகளைத்தேர்வு செய்யும் அறிவைப்பெற்றிருத்தல் மிகமிக அவசியம். அந்த அறிவு எப்படிக்கிடைக்கும்.?
ஏற்கெனவே தற்சார்பாக இயங்கும் முன்னோடிகளிடம் பழகி, பயணித்து கற்றுக்கொள்ள வேண்டியதுதான் வேறு வழியே இல்லை.