"நள்ளென் காமத்து பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே "

-நெடுநல்வாடை

சிறுபொழுது பழகுதல்

எனக்கு உடம்புக்கு சரியில்ல நாளை காலை மருத்துவமனை வர முடியுமான்னு கேட்டிருந்தான் நண்பன்.

ஏன்டா என்ன செய்யுது உடம்புக்கு?

வர முடியும்னா வா. இல்லன்னா வேனாம் விட்ரு.

சரிடா வர்ரேன்.

மருத்துவரின் அழைப்புக்காக காத்திருந்தோம். நண்பன் எதுவுமே பேசாமல் மருத்துவனை பெஞ்சை தன் விரல்களால் சுரண்டிக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் செவிலியர் நண்பனின் பெயரை உச்சரிக்க நாங்க இருவரும் மருத்துவரின் முன் அமர்ந்திருந்தோம்.

அந்த அறை மொத்தமும் மௌனத்தால் குடியேறியிருந்தது.

மருத்துவர் ம்.. உங்களுக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க?

சார் அது… அது வந்து…

மீண்டும் பேரமைதி.

நண்பனின் கைகளைப்பார்த்தேன். அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் அவனது கைகள் வேர்த்திருந்தது.

ம். தம்பி சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை?

சார் அது… அது வந்து…

இதை நீங்க ஏற்கெனவே சொல்லீட்டீங்க. வந்து அப்புறம் சொல்லுங்க.

அது வந்து… விந்து முந்துது சார் அதான்…

ம் இவ்ளோதானா பிரச்சனை. இதுக்குத்தான் அது வந்து அது வந்துன்னு இழுத்திட்டேருந்தீங்களா?

அதுவரை என் கண்களை நேருக்குநேர் சந்திக்காமலிருந்த அவனது கண்கள் ஒரு நிமிடம் என் கண்களை சந்தித்து மறைந்தது. மருத்துவர் மருந்துகளை எழுத ஆரம்பித்தார்.

அவனுக்குத்தேவையான மருந்து மாத்திரைகள் மொத்ததையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றோம்.

வரும் வழியில் இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றுமே பேசிக்கொள்ளாமல் நீண்ட தூரங்களைக்கடந்திருந்தோம்.

ஓரிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு நண்பன் பேசத்துவங்கினான்.

ஏன்டா இதெல்லாம் சாப்பிட்டா எனக்கு சரியாயிடும்ல்ல!

ஏன்ட்ட கேட்டா எனக்கென்னடா தெரியும்? நீ கூப்ட்ட நான் வந்தேன் அவ்ளோதான்.

ஓஹோ! நான் கூப்பிட்டேன் நீ வந்தே. நான் கூப்பிடலைன்னா நீ வந்திருக்க மாட்டே அப்படித்தானே?

இதென்னடா வம்பா போச்சி. உனக்கு இப்படியொரு பிரச்சனை இருக்குன்னு நீ சொன்னாத்தானே தெரியும். நீ சொல்லாம எனக்கு எப்படி. தெரியும் நான் என்ன மந்திரவாதியாடா…

பைக்கை சைடு ஸ்டாண்டு போட்டு அமர்ந்திருந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவன் கைகளைக்கவனித்தேன். டேங்க் கவர் ஜிப்பை திறப்பதும் மூடுவதுமாக அவனது கைகள் நிலைகொள்ளாமலிருந்தன.

இப்போது அவனுக்குத்தேவை. எந்த விமர்சனங்களுமில்லாத முழுமையான அரவணைப்புக்காக மட்டுமே அவனது ஒவ்வொரு செய்கையும் எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டேயிருந்தது.

சரி இப்போ சொல்லு எவ்ளோ நாளா இந்தப்பிரச்சனையிருக்கு?

ம் தெரில… இப்போ ரொம்ப நாளாவே.

ம். சரி டெய்லி உன்னோட ரொட்டீன் லைப்ப கொஞ்சம் சொல்லேன் கேப்போம்.?

ஏன்டா எதுக்கு கேக்குறே?

சும்மா சொல்லு தெரிஞ்சிக்கலாம்ன்னு.அதை உன் வாயால சொல்லும்போது இன்னும் நல்லாயிருக்கும்ல்ல.

காலைல ஏழு மணிக்கு எந்திப்பேன்.

அப்புறம்.

அப்புறமென்ன காலைக்கடன்லாம் முடிச்சிட்டு அப்படியே பைக்எடுத்துட்டு எட்டு மணிக்கு ஆபீஸ் போயிட்டு அன்னைக்குத்தேதிக்குன்டான லைன வாங்கிட்டு அப்படியே நேரா டீக்கடைதான்.

அது வேறொன்னுமில்ல. பேங்ல லோன் பிடிச்சிக்குடுக்குற வேல அதைத்தான் லைனுன்னு சொல்லுது மூதி.

டீக்கடையா அங்க எதுக்கு?

காலைல டிபனே டீ, வடைதானே!

நாசமா போச்சி.

சரி அப்புறம்.

அப்புறமென்ன அப்படியே போகும். நைட்டு கணகெல்லாம் முடிச்சிட்டு நேரா வீட்டுக்குத்தான். மறுபடி காலை ல எழுந்து இதே மாதிரி வேறொரு லைன புடிச்சி போறது அவ்ளோதான்.

நண்பன் சொல்லுவதை ஒருவாறு புரிந்துகொண்டேன். அதாவது பெரும்பான்மை நேரங்களில் உணவென்பதே டீயும் வடையும்தான். அப்புறம் வாழ்க்கையில் அவனுக்கே அவனுக்கான நேரமென்பதை அவன் அமைத்துக்கொள்வதே இல்லைபோலும்.

சரிடா நான் ஒன்னு சொல்றேன் கேக்குறியா?

ம் என்ன சொல்லு.

நாளை காலை அதிகாலையில ஒரு நாளுமணிக்கு அலாரம் வச்சி எழும்பி நேரா புளியந்தோப்பு ஸ்டாப்புக்கு வந்துடு. நாம ஒரு எடத்துக்குப்போறோம்.

நான் ஏன்டா நடுராத்திரி எந்திரிச்சி சுடுகாட்டுக்குப்போகனும்?

நீ  கூப்பிட்டப்போ நான் வந்தேன்ல்ல. அதேதான் இதுவும்.

சொன்னமாதிரியே அதிகாலை நாளுமணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து புளியந்தோப்பு ஸ்டாப்புக்கு வந்திருந்தான். அப்போது இருவரும் அவரவர் வண்டியில் கிளம்பினோம். சுமார் அங்கிருந்து ஒருமணிநேரப்பயணத்தில் மலையடிவாரத்தை நெருங்கினோம். இதான் இதேதான் இனிமேல் பைக்பயணம் சாத்தியமில்லை. பைக்கை ஒரு மாட்டுவண்டித்தடம் முடியுமிடத்தில் நிறுத்திவிட்டு பயணத்தை கால்நடையாக்கினோம்.

இன்னும் கொஞ்சதூரம் நகர்ந்தால் செல்போன் கட்டாகிவிட வாய்புண்டு. ஆதலால் அப்போதே ஈசு அண்ணனுக்கு போன்பன்னி கிடை கிடக்குமிடத்தை உறுதியாக்கிக்கொண்டு நகர்ந்தோம்.

நாங்கள் நடந்து செல்ல, செல்ல பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.

கிடையை நெருங்க நெருங்க கிடையின் வாசம் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தது.

எங்கள் இருவரின் வருகையைத்தெரிந்ததும் நாயொன்று எங்களை நோக்கி குலைத்துக்கொண்டே விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தது. அதன் பின்னாடி இருவர் அந்த நாயை அதட்டி ஹேய் அது நம்ப ஆளுங்கதான்னு  சாந்தப்படுத்தினார்.

ஈசு அண்ணன்… னு இழுத்தேன்.

ஆங் வாங்க வாங்கன்னு சிரித்த முகத்தோடு வரவழைத்துச்சென்றார்கள்.

தம்பி பால்ச்சோறு சாப்பிடுறீங்களா?

ம் வந்ததே அதுக்குத்தானேன்னு மனதுக்குள் நினைத்துக்கொண்டே “இல்லன்னா அதெல்லாம் வேனாம். சும்மாதான் பாத்துட்டுப்போகலாம்னு வந்தோம்.

நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு காலைலைலேயே இங்க வருவீங்கன்னு நேத்தைக்கே ஈஸ்வரன் தம்பி போன் பன்னிடுச்சி வாங்க சாப்பிடலாம்.

ரெண்டுபேருக்கும் ஆளுக்கொரு தட்டில் பால்சோறு தந்தார்கள். திடமுமில்லாத, திரவமுமில்லாத குழைவுத்தன்மையோடு நல்ல ருசியேறியிருந்தது பால்சோறு. இன்னும் கொஞ்சம் வேனுமின்னு கேட்டுவிட ஆசைதான், ஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க அப்படியே எழுந்து கொண்டேன்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். வரும் வழியில் நண்பனிடம் கேட்டேன். பால்ச்சோறு எப்படியிருக்குன்னு?

ம், நல்லாயிருக்கு.

ஆமா என்ன ஏன்டா இங்க கூப்பிட்டு வந்தே?

நீ இங்க என்னெல்லாம் பாத்தே? உனக்கு இதைப்பாக்கும்போது என்ன தோனுது?

பாவம் இந்த நாகரீக உலகத்துலேயும் இவ்ளோ கஷ்டப்படுறாங்கல்ல. ஆமா மழையெல்லாம் வந்தா என்னடாப்பன்னுவாங்க?

அங்கே கன்றுக்குட்டிகள் பால் குடித்துவிட்டு சுதந்திரமாய் குதியாட்டம் போடுவது உனக்குத்தெரில….

எந்தப்பரபரப்புமில்லாத தெளிந்த நீரோடையைப்போல அவர்களது ஒவ்வொரு பொழுதும் மெதுவாக நகர்வது உனக்குத்தெரில.

உன்னோட பார்வையனைத்தும் நகரத்து கண்கொண்ட பார்வைதான் இல்லியா?

நீ சொல்றது ஒருவகையில உண்மைதான். நிலவுடைமையின் கோரப்பற்களால் சிதைக்கப்பட்ட வாழ்வுதான் இவர்களோடது ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிற தனி உலகத்தை தொலைத்துவிடாத வாழ்க்கை இவர்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.

இப்போ நம்மோட வாழ்க்கையைஎடுத்துக்கோயேன்? வீட்டில் எத்தனைபேர் சேர்ந்து வாழ்ந்தாலும் ஒவ்வொருவக்கும் ஒவ்வொரு ரசனை உண்பது, உடுத்துவதுன்னு எவ்வளவோ தனித்தன்மையோடுதான் இருக்கிறோம். அதேமாதிரிதான் பணியிடத்துலேயும் எத்தனை பேர் வேலை பார்த்தாலும் நம் திறமை, அறிவு அனைத்துமே வேறு வேறுதான் இல்லியா?

நாம் வாழும் நகரத்தில் என்னதான் இல்ல சொல்லு! எல்லா வசதிகளையும் வாரி வாரி வழங்கிய இந்த முதலாளித்துவ கட்டமைப்பு நமக்கே நமக்கு மட்டுமேயான வாழ்க்கையை மட்டும் தரமறுக்கிறது, அல்லது மறைத்து வைத்திருக்கிறது.

நீ இல்லாமல் போனாலும் உன் வீடு இயங்கும்,

நீ இல்லாமல் போனாலும் உன் வங்கி இயங்கும்.

ஆனால் நீ இல்லாமல் போனால் நீ இயங்க முடியாது.

உனக்குள் நீ எங்கேயிருக்கேன்னு நீதான் கத்டுபிடிக்கனும்.

நான் எப்போதெல்லாம் சோர்வுறுகிறேனோ,அல்லது எப்போதெல்லாம் என் சிந்தனை  சோர்வுறுகிறதோ அப்போதெல்லாம் இதேபோல பட்டியைத்தேர்வு செய்து இவர்களோடு நேரம் செலவளித்து என்னைநானே மீட்டுக்கொள்வேன்.

அதேபோல நீயும் ஆடு, மாடு மேய்த்து உன்னை நீ மீட்டுக்கொள் என்று சொல்லவரவில்லை. உன்னை நீ மீட்கவும், உன்னை யார் என்று அடையாளங்காட்டவும் எது வேண்டுமானாலும் துணை புரியலாம். இசை, ஓவியம், சினிமா, பயணம்ன்னு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வேகமாக சாப்பிட்டு, வேகமாக பயணித்து, வேகமாக வேலைசெய்துனு எல்லாமே வேகமாகயிருக்கும்போது விந்துவும் வேகமாகத்தானே வெளியேறும்.

முல்லைநில மேய்ச்சல் வாழ்க்கை என்பது மருத நிலத்தைப்போல அபரிமிதமான உபரியையும், நவீன முதலிய கூட்டியக்கத்தைப்போல சொகுசான வாழ்க்கையைத்தராவிட்டாலுங்கூட உபரியான நேரத்தை நமக்கு வழங்கும். அந்த நேரம் தருகிற நம்பிக்கையில்தான் வனாந்தரத்தில், கட்டாந்தரையில் வானத்தைமட்டுமே கூரையாக பாவித்து படுத்துறங்க கீதாரிகளால் முடிகிறது.

மழைக்குளியல்

மழைநீரில் பெருமளவு தழைச்சத்து நிறைந்து காணப்படுவதால் மழையில் நனைந்த ஆடு, மாடு உள்ளிட்ட ஆநிரைகள் புத்துணர்வு பெற்றும், மரம் செடி கொடிகள் கூடுதல் பச்சை கட்டியும் காணப்படும். சோம்பலில் இருக்கும் பூமியை அவ்வப்போது வந்து புத்துணர்ச்சியூட்டிச்செல்லும் அழையா விருந்தாளி வான்மழை.

அந்த விருந்தாளியை நாம் வரவேற்கும் முகமாக மழைக்குளியலில் ஈடுபடலாம். மழையில் நனைந்தால் சளி பிடிக்கும், காய்சல் வருமே என்று பயப்பட வேண்டாம். உடலிலிருந்து சளி வெளியேறுவதும், உடல் வருடத்திற்கு இருமுறை காய்ச்சல் காண்பதும் உடலின் நன்மைக்கே…

 

More Information:
  • Minimum Age: 8 years
  • Half Day Trip
  • Available Year-round
Reservation By Phone

+41 22 345 67 88

Close