"குக்கூ என்றது கோழி அதன் எதிர்
துட்கென்றன்று என் தூ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே"
பண்ணையும், வைகறையும்
வைகறையில் துயில் எழுவது சிறந்தது என்று உலகமே கூறினாலும் நம் அகம் சோம்பலுக்கு பழக்கப்பட்டுப்போன ஒன்று. இன்னும் கொஞ்சநேரம் உறங்கலாம்… இன்னும் கொஞ்சநேரம் மட்டும் உறங்கலாம் என்று உடலும், மனமும் போட்டி போட நாம் படுக்கையில் புரண்டுகொண்டிருப்போம். ஆனால் தற்சார்பு வாழ்க்கையில் குயிலும், மயிலும் மட்டுமின்றி நாம் வளர்க்கும் ஆநிரைகளும் வைகறையில் நம்மை அழைத்துக்கொண்டேயிருக்கும். வேறு வழியில்லை நாம் எழுந்தேதீர வேண்டும். நம்முடைய ஆரோக்கியத்தில்தான் ஆநிரைகளுக்கு எத்தனை அக்கறை!
காலைக்கடன்
ஆம்! அது கடனேதான். முந்தையதினம் நம்உடம்பினுள் வாங்கிக்கொண்டதை வெளியேற்றியே ஆக வேண்டும். காலைக்கடன்களை முடித்தபின்பு காலைக்கடமைகளை செய்யவேண்டியது தான். கோழிகளை கூண்டிலிருந்து திறந்துவிடுவதில் துவங்கி ஆடு, மாடுகளின் கழிவுகளை கொட்கையிலிருந்து அகற்றி சுத்தம் செய்தல் வரை நீளும் ஒர் அதிகாலைப்பொழுது.
காலையின் மூன்று பொழுதுகள்
வைகறை
காலை
நண்பகல்
காலை வேளையின் மிக முக்கிய பணிகள்
அதிகாலையில் ஆநிரைகளை பராமரித்ததுபோக நம் உடலில் ஆற்றல் இன்னும் மிச்சமிருந்தால் அது நிலத்தில் உழைப்பதற்கானது. நிலத்தில் உழைக்கவும், காலை ஏறுவெயிலை எதிர்கொள்ளவும் ஏற்ற உணவென்றால் அது கஞ்சியும், கூளும்தானே தவிர இட்டிலியும், தோசையுமல்ல. ஒரு வேளை என் நாக்கு இட்லி, தோசை போன்ற நவீன உணவுக்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறது என்று அதை சாப்பிட்டு நிலத்தில் உழைக்க மண்வெட்டியோடு சென்றால் ‘வரப்பே தலையணை வயல் வெளியே பஞ்சு மெத்தை’ன்னு உறங்க முடியுமே தவிர உழைப்பில் ஒரங்குலம் கூட முன்னேற முடியாது.
நண்பகல் வேலைகள்
நண்பகலில் வெயில் உக்கிரமேறியிருக்கும். அந்த வெயிலிலும் பண்ணையில் உழைத்துக்கொண்டிருப்பவன் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது பண்ணையடிமையாக இருக்க வேண்டும். அந்த வெயிலுக்கு முகம்காட்டாமல் நிழலிலே செய்யக்கூடிய வேலையில் ஈடுபடுவதின்மூலம் நம் உற்சாகம் குன்றாமலிருக்கும்.

அமுது-சமைத்தல்
ஆம்! நம் தோட்டத்தில் நாமே உழுது, நாமே விளைவித்து, நாமே அறுத்து, பழுது நீக்கி சமைக்கும் உணவு ஒரு வகை அமுதமாகத்தானே இருக்க முடியும்.

குளியல்
காலை ஏறுவெயிலில் உழைத்த களைப்புதீரவும், உடல் புத்துணர்வு பெறவும் குளியல் அவசியம்

அமுது-சாப்பிடுதல்
குளித்தவுடன் பசிப்பதும்,பசித்தவுடன் தரமான உணவு கிடைப்பதும், கிடைத்த உணவை எந்தப்பதட்டமும் இல்லாமல் புசிப்பதும் ஒரு வரம்தான்.