பேராசான்

By puravu
January 8, 2025
Scroll Down
தமிழர்களாகிய நமக்கு வாழ்க்கையை இரண்டாக பிரித்து பார்க்கிற அம்சம் உண்டு. ஒன்று அகம் மற்றொன்று புறம். காதல், திருமணம், குடும்பம் உள்ளிட்ட இத்யாதிகளை அகம் என்றும், சமூக பாதுகாப்பிற்காக போர் செய்வது, பொதுப்பிரச்சனைகளுக்காக போராடுவது உள்ளிட்ட வீரம்செறிந்த செயல்களை புறம் என்றும் பிரித்து வைத்திருந்தோம். காதலைப்பாடுவதால் அகநானூறு என்றும், வீரத்தைப்பாடுவதால் புறநானூறு என்றும் பெயர்சூட்டி மகிழ்ந்தோம். தமிழர்களாகிய நமக்கு பிறந்த நாளைக்கொண்டாடுகிற வழக்கம் இல்லை. மாறாக இறந்தநாளை நினைவேந்துகிற வழக்கம் இருக்கிறது. பிறந்தநாளை ஏன் கொண்டாடுவதில்லை? என்று சொன்னால் மனிதன் பிறந்ததுமுதல் இறப்பு வரை ஒவ்வொரு பிறந்ததினமும் அவனுக்கு உணர்த்துவது மரணத்தை நினைவூட்டும் ஒரு எச்சரிக்கை மணியைத்தான். கிடைத்ததற்கரிய மனித வாழ்க்கையில் நம் வாழ்க்கை செழுமையடைவதை மட்டும் சிந்தித்து வாழ்வோமென பிறந்தநாளை தவிர்த்தோம்.

மாறாக இறந்த தினத்தை நினைவுகூர்வது மட்டுமல்ல அதை ஒரு வாழ்வியல் கொண்டாட்டமாக மாற்ற முனைந்தோம். ஒரு மனிதனின் மரண தினம் கொண்டாடப்படக்கூடிய ஒன்றா? என்றால் ஆம் நிச்சயம் கொண்டாடப்படக்கூடிய ஒன்றுதான். ஆனால் எப்போது என்பதுதான் கேள்வியே! மனிதர்கள் காதலை மறப்பதில்லை காரணம் காதலின் விளைகனியாக குழந்தைகள் எப்போதும் நம்மோடு இருப்பதினால் அவர்களுக்காக பொருளீட்டும் பொருட்டு அனுதினமும் ஓடிக்கொண்டிருப்பதினால் அகத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம்.


ஆனால் நமக்காக போரிட்டு செத்து, நலிந்து கிடத்த வாழ்க்கையை ஒருபடியேனும் உயிர்த்திவிட்ட நம் முன்னவர்களை எளிதில் மறந்து கடந்துவிடுகிறோம். “மறதியைப்போல் ஒரு மாமருந்தில்லை” என்று சொன்னது நமக்கெதிராக சிந்தித்தவர்களை மன்னிக்கத்தானே தவிர, நமக்காக சிந்தித்த, பேசிய, பாடிய, போராடிச்செத்த மாமனிதர்களை மறந்து போவதற்காக அல்ல.

அந்தவகையில் நஞ்சுபாய்ந்து கிடக்கிற நன்னிலம் காக்க போராடி உயிர் துறந்த வேளான் விஞ்ஞானி பேராசான் கோ.நம்மாழ்வார் அவர்களை புறவு வாழ்வியல் முற்றம் கடந்த ஞாயிறு அன்று நினைவேந்தியது. நினைவேந்தல் நிகழ்வுக்காக வந்திருந்த வேளாண் முன்னோடிகள், இயற்கை ஆர்வலர்கள், சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் புறவு தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

-பறவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close