"கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்
தாதெரு மறுகில் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க்கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை"
உணவு
காடுகளுக்குள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சேகரிக்கப்பழகுவதைப்போல, சேகரித்த பொருட்களோடு தோட்டத்தில் நாமே உற்பத்தி செய்த பொருட்களையும் சேர்த்து சமைக்கப்பழகுவதும் ஒருவகைக்கலைதான். சேகரித்தலும், சமைத்தலும் கைகளுக்குச்சிக்காத தொலைதூரக்கனவல்ல. கொஞ்சம் முயன்றால் அது நம் கைகெட்டும்தூரம்தான்.
சைவ உணவின் வகைகள்
அடிசில்
அக்காரம் என்றால் கற்கண்டு அல்லது கரும்பு வெல்லம் இவற்றைக்கொண்டு செய்வது அக்கார அடிசல்.... நெய் சேர்த்து செய்தால் நெய்யுடை அடிசில்.... பால் சேர்த்து செய்தால் பாலுடை அடிசில்... இப்படி அடிசிலில் பலவகை இருந்தாலும் குழைவாக ஆக்கிய நெல்லரசிச்சோறு என்று பொதுப்பெயரில் அழைக்கப்படுவதுமுண்டு.
கலவை
சோற்றுடன் வேறுசில பொருட்கள் சேர்த்து சமைக்கப்படும் உணவே கலவையுணவு. எகா. புளியோதரை சாதம், கறிவேப்பிலை சாதம், தக்காளிசாதம்.
கும்மாயம்
கும்மாயம் என்பது வேகவைத்த பருப்பு. இவற்றை உளுந்து பாசிப்பயறுமாவு, நெய், பனங்கருப்பட்டி சேர்த்து ஒரு வகை இனிப்பு பலகாரமாகவும் செய்யலாம்.
மூரல்
சரியாக வேகாத சோறு விதைவிதையாய் இருக்கும். நன்றாக வெந்துவிட்டால் குழைந்துபோகும். இரண்டிற்குமிடையில் சரியான பதத்தில் இருந்தால் குழம்பு கூட்டி சாப்பிட இதமாயிருக்கும் சோறு மூரல் எனப்படுகிறது
மோதகம்
கற்கண்டை இளக்கிப்பாகாக்கி செய்யப்படும் ஒருவகைக்கொழுக்கட்டை.
களி
கொதிக்கின்ற நீரில் மாவைச்சிறிது சிறிதாகச்சேர்த்துக்கலக்க வேண்டும். அது கெட்டிபடும் நிலை வரும்போது துடுப்புகொண்டு நன்றாக கிண்ட களி தயாராகும். எகா: கேப்பைக்களி, உளுந்தங்களி, வெந்தையக்களி.
நுவணை
கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம், குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானி மாவுடன் இனிப்பு கலந்து செய்யப்படும் ஒருவகை இனிப்புருண்டை.