"வான்குருவியின் கூடு வல்லருக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் -யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது "

– ஔவையார்.

படைப்பு மனம் பழக்குவோம்

மனிதன் நகரத்தில் வாழ்ந்தாலும் சரி, கிராமத்தில் தற்சார்பு வாழ்க்கையை மேற்கொண்டாம் சரி மனித மனம் சிறதுநேரம்கூட ஓய்வில்லாமல் எதையேனும் சிந்தித்துக்கொண்டேயிருக்கிறது. அந்தச்சிந்தனையைக்கூர்ந்து  கவனித்தால் அது சிலநேரம் படைப்பு வடிவம் கொண்டிருக்கும்.நமது படைப்பு மனத்திற்கு தீனிபோடும் விதமாக நமது வேலை அமைந்துவிட்டால் மகிழ்ச்சி. மாறாக அதற்கு நேர் எதிர்திசையில் வேலை அமைந்துவிட்டால் அதோகதிதான்.

ஒரு மகிழுந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்வதாக நினைத்துக்கொள்வோம். அதில் நமக்கு வழங்கப்படும் வேலையென்பது மகிழுந்தின் ஏதேனுமொரு உதிரிப்பாகம் சம்பந்தபட்டதாகத்தான் இருக்குமேத்தவிர அதன் ஒட்டுமொத்த தயாரிப்பு குறித்து நமக்கு எதுவும் தெரியப்போவதில்லை. விளைவு நம்முடைய படைப்பு மனத்தோடு நிகழ்கால தர்க்கம் வந்து மோதும்போது நாம் அன்னியப்பட்டு நிற்போம்.

அதை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்று நியாயமான நமது ஆசையை வெளிப்படுத்தினால், காலையில் எழுந்து சோற்றைக்கட்டிக்கொண்டு கம்பெனி தரும் வாகனத்தில் வேலைக்கு வந்தோமா நிறுவனம் நமக்களித்த வேலையைச்செய்தோமா, இடையில் தேநீர் இடைவேளை உணவு இடைவேளைன்னு இருந்துவிட்டு வீடு போய் சேர்ந்தோமான்னு இருக்கனும். ரொம்ப மனஉளைச்சலா இருக்கா? சினிமா பாரு. சினிமாபார்த்தும் பாரம் குறையலியா மால், உணவகம்னு எதையேனும் நுகரு. அதுவும் பத்தலைன்னா குடித்துவிட்டு உன் மனத்தை போதையில் ஆழ்த்து அப்படீங்கிறதுதான் முதலாளித்துவ கட்டமைப்பின் பதிலாக இருக்கும்.

இந்த முதலாளித்துவ கட்டமைப்பிற்கு நாம் ஒரு நுகர்வுப்பண்டம் அவ்வளவே அதற்கு நம் படைப்பு மனம் குறித்த அக்கரையெல்லாம் துளியும் இருக்கப்போவதில்லை.

ஆனால் இதையே இன்னொரு காட்சியை கற்பனைசெய்து பாருங்கள். உங்களுக்கு ஒரு மாட்டுவண்டியோ அல்லது குழந்தைக்கு நடை வண்டியோ தேவைப்படுகிற பட்சத்தில் கிராமத்தில் ஒரு பலகை வேலை செய்யும் தச்சு ஆசாரியைச்சந்திக்கும்போது அந்த குறிப்பிட்ட வடிவத்திற்கு எந்த மாதிரியான மரம் தேவைப்படும் என்பதில் துவங்கி  பலகைவாங்கி வருவது,  வாங்கி வந்த பலகையை சிறுசிறு பாகங்ளாக செய்து நம் கற்பனையில் உதித்த வாகனத்தை நம் கண்முன்னே நிஜமாக்கிக்காட்டுகிறவரை நிகழும் ஒரு பயணம் இருக்கிறதே அது என்ன விலைகொடுத்தாலும் கிடைக்கப்பெறாத மாகானுபவம்.

நமது படைப்பு மனத்தை  உயிர்ப்போடு வைத்திருக்க பலகை தொழில் பழகுவோம்.

Close