மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
-திருவள்ளுவன்
நல வாழ்வு
பருவநிலைக்கேற்றார்போல இயற்கையாக கிடைக்கிற காய், கனி உள்ளிட்ட பொருட்கள்.
தோட்டத்தில் நாமே உற்பத்தி செய்து சாப்பிடுகிற பொருட்கள் அனைத்துமே தரமானதாகத்தான் இருக்கும். ஆனால் நாம் நேரம் தப்பியோ, அல்லது மிகுதியாகவோ உட்கொள்ளும்போது உடல் நோயுறுவதை தடுக்க முடியாது.
நோயை தடுக்கும் முகமாகவும் அல்லது நோய் நம் உடலைத்தாக்காவண்ணம் நம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது சிறப்பு. இதனை முழுதுணர்ந்துதான் நமது முன்னோர்கள் ‘உணவே மருந்து மருந்தே உணவே’ என்கிற தத்துவத்தை முன் வைத்தார்கள்.
சூத்திரம்
துத்தி கீரை
நாம் உணவு உற்பத்தியில் ஈடுபடாமலேயே இயற்கையாகக்கிடைக்கும் ஒரு உணவு மூலப்பொருள் துத்தி.
- இதன் இலைகளுடன் பருப்பு சேர்த்து அவித்து கடைசல் செய்து சாப்பிட்டு வர உடல் சூடு தணிந்து மூலநோய் தீரும்.
- இதன் விதைகளை சுட்டு பொடி செய்து அதைக்குழந்தையின் ஆசனவாயில் சிறிதளவு தேய்த்துவிட குடலிலுள்ள புழுக்கள் மலத்தின் வழியாக வெளியேறும்.
- இதன் இலைகளை அரைத்து சாறு எடுத்து கொப்புளித்துவர பல் ஈறுகளில் வலி தீரும்.
சுரைக்காய்
- இந்தக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது சிறுநீரகக்கோளாறு, நீங்கி உடல் சூடு குறையும்.
- கோடைகாலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறு நீங்கி நாவறட்சி அடங்கும்.
- நீரழிவு நோய் உள்ளவர்கள் இந்தக்காயை அடிக்கடி சாப்பிட்டுவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாகக்குறையும்.
பப்பாளி
- பப்பாளிப்பழம் அடிக்கடி சாப்பிட்டுவர சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்து குடல் பூச்சிகளை அழித்து சுத்தம் செய்யும்.
- பப்பாளிக்காய் குழம்பு வைத்து பிரசவித்த பெண்கள் சாப்பிட்டு வர பால் சுரப்பு கூடும்.
- பப்பாளிப்பாலை பசும்பாலுடன் கலந்து சேற்றுப்புண்கள்மேல் பூசிவர புண்கள் ஆறும்.
"இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்!நாளும்
விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து"
– ஏலாதி