"பெருமடல் பெண்ணைப் பிணர்ந்தோட்டு குடவாய்க்
கோடிப்பின்னல் வாங்கித்தளரும் பைங்குரும்பை"
பனை தொழில் பழகுவோம்
சமீபமாக பனையைப்பாதுப்போம்,பனையை மீட்டோம், பனை விதைகளை நடுவோம் ன்னு நிறைய சொல்லாடல்கள் நம் காதினில் வந்து விழுந்துகொண்டேயிருக்கிறது
பனை விதைகளை நாம் விதைத்து அதன்மூலம் மட்டுமே பனைமரங்கள் தன்னை தற்காத்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் அப்படியில்லை. நாம் பார்த்த வரைக்கும் பனைமரங்கள் நிறையவே இருக்கிறது. ஆனால் அதிலிருந்து கிடைக்கிற உபயோகப்பொருட்களை நுகர நாம்தான் மனமின்றி இருக்கிறோமேத்தவிர பனை முன்னெப்போதையும்விட இப்போது மிகவும் பிரகாசமாகத்தான் காட்சியளிக்கிறது.
பனையில் ஏறி பனைப்பொருட்களின்மீது உழைப்பைசெலுத்துவதன்மூலம் அதன் மதிப்பைக்கூட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பதைவிட எளிதான காரியம் வெகுமக்களைத்திரட்டி பனைப்புரட்சி என்கிறபெயரில் பனைவிதைகளைத்தூவிச்செல்வது. பொதுச்சமூகத்தின்போக்கு காலந்தோறும் அப்படித்தான்இருந்திருக்கிறது. பொதுபோக்கு எப்படியோ இருந்துவிட்டுப்போகட்டும் ஆனால் தற்சசார்பு வாழ்க்கையை மேற்கொள்ளப்போகும் நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தியென்று சில இருக்கின்றன.
அஃது யாதெனில் ஒரு தாவரமோ அல்லது விலங்கினமோ மனிதனின் பல்வேறு வகையிலான பயன்பாட்டிற்கு இருப்பவற்றை நாம் போற்றி பாதுகாத்திடல் வேண்டும் என்பதுதான் அது.
பனையின் சிறப்பம்சங்கள்
வேர் பகுதி, தூர் பகுதி, நடுப்பகுதி, பத்தை மட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை, பனங்காய், பச்சை மட்டை, சாரோலை, குருத்தோலை என மொத்தம் பன்னிரெண்டு பகுதிகளை உள்ளடக்கியது. இதன் அனைத்து பாகங்களிலிருந்தும் நமக்கு பலவகைப்பயன்பாடு இருக்கிறது.
ஒரு பனைமரத்தின் ஓராண்டு பயன்பாடென்பது 150லிட்டர் பதநீர், 1கிலோ தூம்பு,1.5கிலோ ஈர்க்கு, 8ஓலைகள், 16நார்முடிகள் என்றும்…
மேலும் ஒரு வருடத்திய கணக்கு; 24கிலோ பனை வெல்லம், 2கூடைகள், 2தூரிகைகள், 6பாய்கள் என முறைப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பின் ஆய்வுகள் சொல்கின்றன. இதில் நாம் எவற்றையெல்லாம் நம்முடைய வாழ்வியல் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியுமோ அவ்வளவு நல்லது.