"இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென்
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றினை"
கூடு அமைத்தல்
இருபதாண்டுகளுக்குப்பிறகு நான் வாழ்ந்த கிராமத்திற்கு போயிருந்தேன். அது இப்போது கிராமமாக இல்லை. நவீனச்சிந்தனையை மொத்தமாக உள்வாங்கிக்கொண்ட நகரமாக உருமாறியிருந்தது. நாங்கள் வாழ்ந்து வந்த தெரு ஒரு பாரஉந்து செல்லுமளவுக்குமான அகலம் தற்போது முற்றத்து படிக்கட்டுகளால் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு ஆட்டோ நுழைவதற்குக்கூட வழியில்லாத சூழலில் சுருங்கிப்போயிருந்தது.
இந்தப்பிரபஞ்சம் நாளுக்கு நாள் இயங்கிக்கொண்டும் விரிவடைந்துகொண்டும் இருக்கிறதென்று சொல்லும்போது நம்மூர்களில் இந்தத்தெருக்கள் மட்டும் ஏன் நெருக்கடிகளில் மிதக்கிறதென நான் அடிக்கடி யோசித்ததுண்டு. அதுவும் நம் மக்களுக்கு வீடு கட்டுவதென்றால் சும்மா கட்டுகட்டுன்னு கட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது ஏற்கெனவே ஒரு வீடிருக்கும்போது ஏன் இன்னொரு வீடு கட்ட வேண்டும்?
இன்னொரு வீடும் கட்டி முடித்தாயிற்றா! பரவாயில்லை மாடி கட்டலாம்…. மாடியும் கட்டி முடித்தாயிற்றா! பலே…மாடி மேலே மாடி கட்டலாம். அப்பாடா பக்கத்து வீட்டுக்காரனை விட நம் வீட்டு மாடி சற்றே உயரமானதில் சந்தோஷம். அப்படியே பால்கனியை தெருவின் பக்கம் நீட்டிக்கலாம் தப்பில்லை. ஆச்சா…அப்படியே வீட்டின் படிக்கட்டை ஒரு இரண்டடி தெரு வரைக்கும் நீட்டிக்கலாம். எப்படியும் கட்டலாம். கட்டிக்கொண்டே இருக்கலாம். நமது கடன் வீடு கட்டிக்கொண்டே இருப்பதுதான். என்கிற ரீதியில் போய்க்கொண்டேயிருக்கிறது.
வருடத்தில் பாதி நாட்கள் பனியால் மூடப்பட்ட, உயிர்ச்சூழல் குறைவாக உள்ள ஐரோப்பிய சூழ்நிலையில் அரசுக்கு கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே தனக்கு உணவு உத்திரவாதம். இல்லையேல் கஷ்ட ஜீவனம்தான்.ஆனால் இங்கே அப்படியில்லை உணவில் தன்னிறைவு என்பதும் ஒட்டுமொத்த வாழ்க்கையில் தற்சார்பு புள்ளியென்பது மிகமிக சாதாரணம்.அதனால் அரசின்மீது இத்தனை அலட்சியம் குடியேறியிருக்கிறது குடிகளுக்கு.
ஆநிரைகளை மேய்த்து வீடு திரும்பும் வழியில் அடுப்பெரிக்க சுள்ளிகள் சேகரித்து வருவதில் துவங்கி, அப்படியே தெருவிறங்கி நடந்தால் சாரணத்தி கீரையும், புளியம்பழமும் உணவுக்காக வீடு கொண்டு வந்து சேர்ப்பதுதானே நமது வாழ்வியலாக இருந்தது.
ஐரோப்பா நவீன குடிமைச்சமூகமாக உருவெடுத்து ஜநூரு வருடங்களைகடந்து விட்ட நிலையில் நாமும் அவர்களைப்போல மிக வேகமாக நவீனமாக வேண்டுமென்கிற அவசர நிலை புரிகிறது. ஆனால் கட்டுமானத்தில் ஐரோப்பியர்களிடம் இருக்கிற நேர்த்தியோ, அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கிற சட்ட ஒழுக்க விதியோ நம்மவர்களிடத்தில் ஏன் இல்லாமல் போனது என்று யோசிக்கிறபோது எனக்கு ஒன்று புலப்படுகிறது?
நவீன வீடு என்பது கௌரவத்தின் அடையாளமே தவிர வேறொன்றுமில்லை. ஒரு வீடு கட்டப்படும்போது அதன் அடிக்கட்டுமானம் துவங்கி பூச்சு, குளியலறை, கழிவறை மற்றும் சமையலறைக்குத்தேவையான குழாய் அமைப்பு, வண்ணம், மின் அமைப்பு, மர வேலைகள், உள் அலங்காரம், வெளி அலங்காரம் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்துவிட்டு திறப்பு விழாவிற்கு சாவி வாங்கும் காலம் வரைக்கும் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கிறதொனியில் அன்னியமாகி நின்று விடுகிறோம்.
புதிய வீட்டில் குடியேறி வசிக்கத்துவங்கும்போது பராமரிப்புக்காக நம்முடைய நேரத்தையும்,பொருளாதாரத்தையும் வீடு நம்மிடம் கேட்கும்போது நாம் வெறுமையை சந்திக்கிறோம்.காரணம் அதனுடைய மொத்த கட்டுமானத்தில் நம்முடைய நேரடிப்பங்களிப்பென்பது துளியுமில்லாமல் போனதே.
வானமே மிகப்பிரம்மாண்டமாய் விரிந்து நிற்கும் ஒரு முல்லைநில வனாந்தரத்தில் அங்கே கிடைக்கிற கட்டுமானப்பொருட்களை வைத்து மிக சொற்ப கால இடைவெளியில் குரம்பைக்கட்டி பெரும்பொழுதில் குரம்பையின் உள்ளும்,சிறுபொழுதில் குரம்பையின் முற்றத்திலும் வாழ்ந்து பழகலாம்.
நமக்குக்கிடைத்திருக்கிற இந்த சிறிய வாழ்க்கைக்குள் நகரம் தந்த வெறுமையை போக்கிக்கொள்ளவும், நமக்குத்தேவையான உறைவிடத்தை நாமே அமைத்துக்கொள்ள முடியுமென்கிற நம்பிக்கை வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு குரம்பைக்கட்டுமானப்பயிற்சி மிகச்சிறந்த வரம்.
மழைக்குளியல்
மழைநீரில் பெருமளவு தழைச்சத்து நிறைந்து காணப்படுவதால் மழையில் நனைந்த ஆடு, மாடு உள்ளிட்ட ஆநிரைகள் புத்துணர்வு பெற்றும், மரம் செடி கொடிகள் கூடுதல் பச்சை கட்டியும் காணப்படும். சோம்பலில் இருக்கும் பூமியை அவ்வப்போது வந்து புத்துணர்ச்சியூட்டிச்செல்லும் அழையா விருந்தாளி வான்மழை.
அந்த விருந்தாளியை நாம் வரவேற்கும் முகமாக மழைக்குளியலில் ஈடுபடலாம். மழையில் நனைந்தால் சளி பிடிக்கும், காய்சல் வருமே என்று பயப்பட வேண்டாம். உடலிலிருந்து சளி வெளியேறுவதும், உடல் வருடத்திற்கு இருமுறை காய்ச்சல் காண்பதும் உடலின் நன்மைக்கே…
More Information:
- Minimum Age: 8 years
- Half Day Trip
- Available Year-round


