இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகத்தோறும்
வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிர.
சாகசம் காண்போம்
இந்த நவீன உலகத்து சூழலிலும் தற்சார்புக்கு துணைபுரிந்து நிற்கிற கொல்லுப்பட்டறை உயிரோடிருப்பது அதிசயத்திலும் அதிசயம்தான்.
கடப்பாறை, மண்வெட்டி, கத்தி, அரிவாள் மட்டுமில்லாது மாட்டு வண்டிக்கு தேவைப்படுகிற அச்சாணி, வண்டியிழுக்கும் மாடுகளுக்குத்தேவையான லாட இரும்பு போன்ற பொருட்களின் அழகியல் குன்றாமல் தருவதும் அதே கொல்லுப்பட்டறைதான்.
ஒரு இரும்புப்பட்டையை சூடேற்றி உருகுநிலைக்கு முந்தைய நிலையான நெகிழ்வுத்தன்மைக்கு கொண்டுவந்து அது சூடு குறைந்து மீண்டும் பழைய நிலைக்குத்திரும்புவதற்குமுன் அதை நாம் விரும்பிய வடிவத்திற்கு கொண்டு வருவது அத்தனை எளிதான வேலையல்ல. எனினும் வாழ்வில் சாகச நிலை வேண்டுமென்று நினைக்கிற வாலிபர்களுக்கு கொல்லுப்பட்டறை சிறந்த களம்.
கொல்லுப்பட்டறைத்தொழிலை யாரேனும் பிரத்யேகமாக கற்றுத்தருகிறார்களா? என்று கேட்டால் தெரியவில்லை என்பதுதான் பதில் ஆனால், கற்றுக்கொள்தற்கான வாசல் நிறைய திறந்து இருப்பதைக்காணமுடிகிறது.
அஃது எவ்வழியெனில் முடிதிருத்தகங்களில் காளையர்கள் வெட்டிக்கதைகள் பேசி அமர்ந்திருப்பதைப்போல ஒரு காலத்தில் கொல்லுப்பட்டறையிலும் பட்டறையைப்போடுவது வழக்கம். அதில் இரும்பை சூடேற்றுவதற்கான காற்றை கொண்டுவர ஒரு அமைப்பிருக்கும். அதை ஒருவர் இயக்குவதற்கு ஏற்ற வகையில் இருக்கை அமைத்து இருப்பார்கள். அந்த இருக்கையைக்கைப்பற்றி பழங்கதைகள் பேசி பொழுதுபோக்குவதுதான் அது.
நமது மேசைக்கு கனினியும், கைகளுக்கு அலைபேசியும் வருவதற்கு முன்புவரைஅந்த இருக்கையை கைப்பற்றுவதற்கு போட்டி இருந்தது. ஆனால் இன்று அந்த இருக்கைக்கு எந்தப்போட்டியும் இல்லாமல் கேட்பாரற்றுக்கிடக்கிறது.
அதனைக்கற்றுக்கொள்ள ஆசைப்படும் நமது உண்மையான விருப்பதை தெரியப்படுத்துகிறபோது அது ஒரு வேலையாக நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது அந்தப்புகையின் நெடியையும், வெப்பத்தையும் தாங்கிக்கொள்ள நாம் நம் உடலுக்கு உத்தரவிட வேண்டும்.
அப்படியே அந்தப்புகையின் நெடியும், இரும்பை வசதிகேற்றார்போல வளைப்பதின் நுட்பமும் பழகிப்போனால் அடுத்து சம்பட்டியை தூக்கி அடித்து பழக வேண்டியதுதான். சம்பட்டி அடியும் சரியாக கற்றுவிட்டபிறகே கொல்லுப்பட்டறை ஆசாரி ஆசனம் நமக்குகிடைக்கும்.
தொடர்ந்து அந்தக்கொல்லுப்பட்டறை வேலையில் ஈடுபடும்பொழுது விரிந்த மார்பும், திரண்ட தோள்களும் கட்டழகுக்கைகளுடன் கூடிய உடலாக நம் உடல் மாறுவது மட்டுமல்ல
“பட்டறையில் நீ கல்லானால் அடிதாங்கு,
அதே பட்டறையில் நீ சம்பட்டியானால் ஓங்கி அடி “
என்று நமது அனு விஞ்ஞானி அப்துல் கலாம் சொன்னதைப்போல நம் மனமும் இந்த வாழ்வியல் பயணத்திற்கு ஏற்றார்போல மாறும் ரசவாதத்தை நாமே உணரமுடியும்.